இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் இன்று (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் இன்றையதினம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகினார். இதன்போது குறித்த சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
