TNA சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும்

இலங்கைத் தமிழரசுக்கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) முல்லைத்தீவு கள்ளப்பாடுபகுதியில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் அவர்கள் பொன்னாடைபோர்த்தி மதிப்பளித்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எய்தப்பட்டிருக்கின்றன.
எனவே மிகவிரைவாக அடுத்தவாரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வாம்.
அந்தவகையில், போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கையிருக்கின்றது என்று தெரிவித்தார்.
