தையிட்டியில் பதற்றம்: ஐவர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அத்துமீறி கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய (21) தினம் விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது வேலன் சுவாமி , வலி கிழக்கு தவிசாளர் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்ல மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
