நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை ) நிகழ்வு திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றது.

தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான சாவகச்சேரி மறவன்புலவில் உள்ள வயலில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்துள்ளனர்.

அந்த வயலில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நெல் அறுவடை செய்யப்பட்டு பாரம்பரிய முறைப்படி ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டதுடன் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்த சுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம்.

இந்த முறையின்படி படையல் செய்யப்பட்டு பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.
இந்த வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மரபுசார் பண்பாட்டு விழாவாகப் பேணப்பட்டு வருகிறது. இந்தப் புதிர் விழா 291ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.