கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றம்
கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையம் அப் பகுதி மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அதில் ஏழு வீடுகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (15) குறித்த வீடுகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு நீதிமன்ற அதிகாரியால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோப்பாய் பகுதி மக்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அதனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
