யாழில் பழக்கடை வியாபாரிகள் போராட்டம்
யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியிலுள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ். மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை இன்றையதினம் (06) முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள் இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம் முழுமையாக மாநகர சபையினரால் பறிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழில் தமது கடை தொகுதியின் முன்றலில் போராட்டத்தை நடத்திய பழக்கடை உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வியாபாரிகளாகிய நாம் அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக எமது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவை கொண்ட ஈ.பி.டி.பியின் ஆட்சி அதிகார வரையறைக்குள் யாழ் மாநகர சபை இருந்தபோது இந்த கடைகள் எமக்கு வழங்கப்பட்டன.
இதற்காக நாம் யாழ். மாநகரசபைக்கு ஆரம்பதில் 3,000 ரூபாவும் தற்போது 7,500 ரூபாவும் வரியாக செலுத்தி வருகின்றோம். இந்நிலையில் தற்போதும் மேலும் 300 ரூபா வரி உயர்வு என கூறுகின்றனர் அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதேநேரம் கடைகளின் முகப்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்ததற்கு இணங்க அதையும் சில அடிகள் உள்ளே எடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம்.

இதேநேரம் வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து ஏறக்கறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர்.
இங்கு 31 கடைகள் உள்ளன. இவற்றில் கறைந்தது 100 பேர் தொழில் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது.
இந்நிலையில் யாழ். மாநகரசபையின் அதிகரிகள் எமது கடைகளின் அளவை அதாவது அகலந்தை குறைத்து அடையாளமிடும் நடவடிக்கையை நேற்றையதினம் முன்னெடுத்தினிருந்தனர். ஆனால் நாம் எதிர்ப்பு காட்டியதை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே 6 அடிகள் தான் ஒரு கடைக்கான இடப்பரப்பாக வழங்கப்பட்டது. இந்த 6 அடிக்கள் பொருட்டகள், பழங்களை வைத்து விற்பனை செய்யும் தளபாடங்கள், குறைந்தது 3 வியாபாரிகள் என வியாபார நடவடிக்கைகளை கடும் சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில் அந்த 6 அடி அகலத்ததையும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க தற்போது முயற்சி செய்து அதற்கான அடையாளமிடலுக்காக நேற்றையதினம் வருகை தந்து நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தனர். அதற்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை நிறுத்தியிருந்தோம்.
அதுமட்டுமல்லாது பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன் வருமானத்தை வைத்தே பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள். மாநகரசபையின் இந்த செயற்பாட்டால் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும்.
இதேநேரம் நாட்டை சுத்தம் செய்வோம் என கோசமிட்டு எமது வாக்குகளை வசப்படுத்தி வெற்றியீட்டிய அனுர தலைமையிலான அரசாங்கம் தான் கூறிய வாக்கறுதிகளை மீறி எம்மை ஏமாற்றிவருகின்றது.
அனுர அரசின் கட்டளைப்படியே தாம் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவ்வாறாயின் மக்களின் அனைத்து செயற்பாடகளையும் பொருளாதார ஈட்டலையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்களை வீதியில் விடுவதா இந்த அரசின் “கிளின் சிறீலங்கா” திட்டம் என்ற சந்தேகம் எழுகின்றது.
இதேநேரம் நாம் நாட்டுக்கு சுமையாக இருக்கவில்லை. வேலை வாய்ப்பு தா என கோரவில்லை. அதற்காக வீதியில் இறங்கி போராடவும் இல்லை. சுய தொழில் நடவடிக்கைகளையே எம்மால் முடிந்த முதலீடுகளை செய்து முன்னெடுத்துவருகின்றோம்.
இதேநேரம் எமது இந்த சுயதொழில் நடவடிக்கையை தடுத்து, தமது வருமானத்தை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் தற்போதைய அரசும் மாநகரசபையும் இந்த மாநகரசபை எமக்கான பொருளாதார ஈட்டலை வழங்குமா? எனவே எமக்கான நியாயம் கிடைக்காவிடின் நியாயத்திற்காக நாம் எம்மால் முடிந்தவரை தொடர்ந்தும் போராடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
இதேவேளை குறித்த எமது பகுதியில் எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் யாழ் மாநகரசபையினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிள்ளது. ஆனால் அவற்றை அவர்கள் செய்வதில்லை.
குறிப்பாக பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வடிகால் பகுதியில் ஏறத்தாள 2 அடிக்கும் மேலாக கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. அதனால் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. இதை எடுத்துக் கூறி சீர் செய்ய கோரினாலும் யாழ் மாநகரசபை கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.