அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு அறுவடையில் ஈடுபட வேண்டும்
வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்தில் கொண்டு அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் இணையவழியில் புதன்கிழமை (15) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல்வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து நடத்தப்பட்டதோடு இதில் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இணைந்துகொண்டனர்.

விவசாயிகள் நெல் அறுவடை காலத்தில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் இணையவழி கந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதன்போது, தற்போதைய மழை வீழ்ச்சி குறைந்து வருவதாகவும் குளங்களுக்கான நீர் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கு அமைவாக புதன்கிழமை (15) மாலையிலிருந்து படிப்படியாக வான்கதவுகள் மூடப்படும் என்றும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நெல்லை அறுவடை செய்யக் கூடிய விவசாயிகள் அதனை அறுவடை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதன் ஊடாக அழிவுகளைக் குறைக்க முடியும் என இதன்போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.